அவசர வாழ்க்கை

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,

வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,

வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,

வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.

 

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,

பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,

உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்

மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

 

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்

புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,

பெங்களுரைத்/சென்னைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.

 

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல

சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு

காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே

பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

 

பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,

உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,

அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது

“நீங்க நல்லவரா? கெட்டவரா ?”.

 

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,

அறிவுக்கெட்டா தர்க்கங்களில் ’புரிந்தது’ போல நடித்து,

வீட்டிற்கு செல்வதற்குள்”செல்லமே” கூட முடிந்து விடுகிறது.

 

செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.

பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

 

Advertisement
  1. No trackbacks yet.

You must be logged in to post a comment.
Follow

Get every new post delivered to your Inbox.